எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மீக பாணியை தொடரும் விஜய்! டெல்லி பயணத்திற்குப் பின் தொடரும் அந்த ரகசிய பயணம்... பின்னணியில் இருக்கும் அதிரடி காரணம்..!!!
டெல்லி அரசு முறைப் பயணத்தை முடித்த பின் கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்குள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துள்ள அவர், பயணத்தை முடித்த பின் நேரடியாக தமிழகம் திரும்பாமல் கர்நாடகா செல்லத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்காக அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான பல்வேறு ஆலோசனைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க: BREAKING: இன்பச் செய்தி.... நாளை மாலை 3.15 மணிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!!
டெல்லியில் இருந்து நேரடியாக கர்நாடகா பயணம்
தகவலின்படி, ஜூன் 12-ம் தேதி டெல்லி பயணத்தை நிறைவு செய்யும் முதல்வர் விஜய், விமானம் மூலம் மங்களூர் செல்லவுள்ளார். அங்கிருந்து கார் மூலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை கோவில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அடிக்கடி தரிசிக்கும் முக்கிய ஆன்மிகத் தலமாக கொல்லூர் மூகாம்பிகை கோவில் அறியப்படுகிறது.
அரசியல்வாதிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற தலம்
மூகாம்பிகை அம்மன் மகாலட்சுமி, மகாசரஸ்வதி மற்றும் மாகாளி ஆகிய மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக வழிபடப்படுகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிகாரம், செல்வாக்கு, அறிவு மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பல அரசியல் தலைவர்கள் இந்த கோவிலுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
மேலும், கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் சக்தி இருப்பதாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். இதனால் நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் இங்கு தரிசனம் செய்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வந்த கோவில்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் மூகாம்பிகை அம்மனின் பக்தர்களாக அறியப்பட்டவர்கள். எம்.ஜி.ஆர் கோவிலுக்கு தங்கவாள் காணிக்கையாக வழங்கியிருந்தார். ஜெயலலிதாவும் தனது அரசியல் வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் இங்கு வந்து வழிபட்டுள்ளார்.
குறிப்பாக 2004-ம் ஆண்டு அவர் கோவிலில் சண்டி ஹோமம் நடத்தியிருந்தார். அரசியல் தடைகள் மற்றும் எதிர்ப்புகள் விலகும் என்ற நம்பிக்கையுடன் இந்த யாகம் நடத்தப்படுவது வழக்கம். இதேபோல், முதல்வர் விஜய்யும் தனது பயணத்தின் போது சண்டி ஹோமம் நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்தார் முதல்வர் விஜய்..! அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு...!!!