2017 டூ 2026 ஆட்சி.... ரைமிங்காக வசனம் பேசி சபையை அதிரவைத்த முதல்வர் விஜய்! பலமான பதிலடியால் திக்குமுக்கான திமுக...!!!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள், நிதி நிர்வாகம் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று 40 நாட்களே ஆன நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களே தீர்ப்பு வழங்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை உருவாக்குவதே தனது அரசின் நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த ஆட்சிகளின் செயல்பாடுகள் மீது விமர்சனம்
உரையின் போது மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து விரிவாக பேசிய முதலமைச்சர், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிர்வாக மற்றும் நிதி சிக்கல்களைச் சுட்டிக்காட்டினார். தமிழக அரசின் கருவூல நிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை குறிப்பிட்ட அவர், முந்தைய ஆட்சிகளின் செயல்பாடுகளால் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: # சற்று முன் : ஹாப்பி நியூஷ்....மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன முக்கிய தகவல்...!!!
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், “பிள்ளையோ பிள்ளை என்று கூறியவர்கள், தமிழ்நாட்டுக்கு தொல்லையோ தொல்லை ஏற்படுத்தியுள்ளனர்” என்று நகைச்சுவை கலந்த வார்த்தைகளில் கருத்து தெரிவித்தார். இந்த கருத்து அவையில் கவனத்தை ஈர்த்தது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி
தங்களது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியாது என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த விஜய், மக்கள் சேவை செய்வது தெரிந்த தங்களுக்கு ஊழல் செய்வது தெரியாது என்று கூறினார். அரசு நிதி, டெண்டர் ஒதுக்கீடு, பணியிட மாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் முறைகேடுகள் செய்வதை தங்கள் அரசு ஏற்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவது, இயற்கை வளங்களை சுரண்டுவது போன்ற செயல்பாடுகளுக்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த கருத்துகள் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் மேசைத் தட்டலுக்கு இடையே பதிவாகின.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்
பெண்களின் மரியாதை மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் முதலமைச்சர் தனது கருத்துகளை பகிர்ந்தார். போதைப்பொருள் கலாசாரத்தை கட்டுப்படுத்துவதும், பெண்களை மதிக்கும் சமூக சூழலை உருவாக்குவதும் அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.
அதேபோல், பெண்கள் நலத் திட்டங்களை இழிவுபடுத்தும் வகையிலான அரசியல் விமர்சனங்களை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மக்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும் என்றாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அரசு தொடர்ந்து பதிலளிக்கும் என்றும் கூறினார்.
தனது உரையின் நிறைவில், சட்டப்பேரவை ஜனநாயக விவாதங்களுக்கான மேடையாக இருக்க வேண்டும் என்றும், மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்காக தொடரும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.