முதலமைச்சர் உத்தரவு...தமிழகத்தில் 30000 புதிய வீடுகள்.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி..!
முதலமைச்சர் உத்தரவு...தமிழகத்தில் 30000 புதிய வீடுகள்.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி..!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ் நாடு முழுவதும் 30 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
கடலூரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கடலூர் செம்மண்டலத்தில் மறுக்கட்டுமான திட்டப் பகுதி பயனாளிகள் 117 பேருக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
மேலும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். அப்போது, 117 பயனாளிகளுக்கு தலா 24 ஆயிரம் ரூபாய் வீதம் 28 லட்ச ரூபாய் கருணைத்தொகையை வழங்கி மேலும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை இவற்றை மக்களுக்கு வழங்கி பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, குடிசையில் வசிக்கும் மக்கள் கான்கிரீட் வீட்டில் வசிக்க வேண்டும் என்று முன்னாள் முதமைச்சர் கருணாநிதி 1970-ஆம் வருடம் குடிசை மாற்று வாரியத்தை அமைத்தார். கடந்த 1972-ஆம் வருடம் கடலூர் செம்மண்டலத்தில் 117 வீடுகள் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து விட்டதால், அதை இடித்து விட்டு 27 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில், 272- வீடுகள் புதிதாக கட்டப்பட உள்ளது. தற்போது அங்கு குடியிருப்பவர்கள் வீடுகளை காலி செய்து கொடுத்தால் 15 மாதத்தில் வீடு கட்டி சாவி உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும், தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின், குடிசை மாற்று வாரியம் என்ற திட்டத்தை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாற்றி இருக்கிறார். தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில், பழுதடைந்துள்ள 30 ஆயிரம் வீடுகளை இடித்து விட்டு புதிதாக கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 15 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளது. தற்போது கட்டித்தரப்படும் வீடுகள் 50 வருடங்களுக்கு உறுதியாக இருக்கும், என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362