வீடியோ: புதுச்சேரி கடற்கரையில் சிறுநீர் கழித்தவர்களை படம்பிடித்து மன்னிப்பு கேட்க வைக்கும் கிரண்பேடி!
kiran bedi alerts people using beach for urine

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று அதிகாலை கடற்கரை சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடற்கரையில் பொதுவெளியில் பலர் சிறுநீர் கழிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை படம் பிடித்து பின்னர் அருகில் அழைத்து மன்னிப்பு கேட்கச் செய்தார். மேலும் இதுபோல் யாரும் செய்யக்கூடாது என்றும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கிரண்பேடி.
தொடர்ந்து ஆய்வை மேற்கொண்ட அவர் கடற்கரை சாலை முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக துப்புரவு தொழிலாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை வரவழைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து 3 மணி நேரம் கவர்னர் கிரண்பேடி துப்புரவு தொழிலாளர்களுடன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:
"புதுவையில் தூய்மை, பாதுகாப்பு, பராமரிப்புக்காக கடற்கரையில் இனி கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரையில் கூடுதலாக ஸ்வட்ச் பாரத் துப்புரவு தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.
கடற்கரையில் குப்பைகளை வீசாமல் இருக்க, ரோந்து செல்லும் போலீசார் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வார்கள். அதனையும் மீறி குப்பைகளை வீசினாலோ, பொது இடத்தில் சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்க நேரிடும்." என்று பேசியுள்ளார்.