காஞ்சிபுரத்தில் காதல் மனைவிக்கு சிலை வைத்த ஆசைத்தம்பி.. இந்தக்காலத்திலும் இப்படியொரு காதல் கதை
HUSBAND MAKE A STATUE HIS WIFE

தன் அன்பு மனைவிக்கு ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டியது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தக்காலத்திலும் காஞ்சிபுரத்தில் தன் காதல் மனைவிக்காக சிலை வைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறார் ஆசைத்தம்பி.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பகுதியில், தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி எனும் ஊரில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்து மளிகைக் கடை நடத்திவந்துள்ளார்.
இவருக்கும் இவரின் மாமன் மகள் 'பெரியபிராட்டி அம்மாள்' என்பவருக்கும் 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பின் மனைவி பெரியபிராட்டி அம்மாள் வழிகாட்டுதலின் படி, கேபிள் டி.வி தொடங்கவே, கைநிறைய வருமானம் வந்தது. அவர் விருப்பப்படி இடம் வாங்கி வீடு கட்டி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், திடீரென ஒருநாள் பெரியபிராட்டி அம்மாளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு என தெரியவர, மொத்த குடும்பத்தினரும் நிலைகுலைந்து போயினர்.
உடல்நிலை மோசமாக போகவே, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இறந்துவிட்டார். அவர் இறக்கும் சிலநாட்கள் முன்னதாக ஆசைத்தம்பி, ''நான் உனக்கு சிலை வைக்கப்போகிறேன்'' என தெரிவித்துள்ளார். அதற்க்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
இதனையடுத்து, பெரிய பிராட்டி அம்மாள் இறந்து 16-வது நாளன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பி ஒருவருடன் ஆலோசனை நடத்தி, சிலைக்கான கல்லைத் தேர்வு செய்து, கடந்த மாதம் 27-ம் தேதி உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கு அழைப்பிதழ் கொடுத்து சிலையை திறந்து வைத்துள்ளார் ஆசைத்தம்பி. இந்த சிலை, கருங்கல்லால் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. 5 அடி, ஓர் அங்குல உயரத்தில் சிலை உள்ளது.
இது சம்மந்தமாக அவர் கூறியது, ''இந்த சிலை வடிவத்தில் என் மனைவி என்னோடும் என் குழந்தைகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தினமும் அவரோடு நான் இரண்டு மணி நேரம் பேசிவருகிறேன். சிலை வந்தபிறகு எனக்குப் பத்து வயது குறைந்ததுபோல் உள்ளது" என அதே காதலோடு நெகிழ்ந்து பேசினார்.