தமிழ் பாரம்பரியத்தை காக்க மஞ்சள் பையுடன் களமிறங்கிய இளம் மருத்துவர்கள்! நிச்சயம் உங்களுக்கும் ஆர்வம் வரும்
doctors in tamil traditional dress
வேலூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் தமிழகத்தின் முக்கிய மருத்துவமனைகளில் மருத்தவர்களாக இருக்கும் மணமகனின் நண்பர்கள் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தலையில் துண்டு, கையில் மஞ்சப் பையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது, என்னுடைய கவனத்தையும்.
அந்த புகைப்படங்களை பார்த்தபோது எனக்குள் தோன்றிய ஒன்று "எத்தனையோ நடிகை, நடிகர்களின் உடைகளைப் பற்றி நாம் எழுதியுள்ளோம்; ஏன் இந்த இளம் மருத்துவர்களின் உடைகளைப் பற்றி எழுதக்கூடாது என்று!". இதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரியத்தை அவர்கள் எனக்கு நினைவுப்படுத்தியது தான். அதிலும் அவர்கள் தலையில் துண்டு, கையில் மஞ்சப்பை என அழகாக தோற்றமளித்தனர். ஏனெனில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்றால் அவ்வளவு அழகு, உண்மை தானே?
தமிழர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் இருப்பதில்லை. நம்மில் பல நிறங்கள் உள்ளன. ஆனால் எல்லா நிறத்தவருக்கும் ஒரே மாதிரியான அழகை கொடுக்கும் ஒரே உடை நமது பாரம்பரிய வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தான். ஆனால் நாகரீகம் என்ற போர்வையில் நமது பாரம்பரிய அழகு அழிந்துவிடுமோ என பலமுறை நான் எண்ணியதுன்டு. ஏனெனில் இப்போதெல்லாம் இந்த மாதிரியான வெள்ளை வேட்டி, சட்டையை பெரும்பாலும் அரசியல் மேடைகளில் மட்டும் தான் காண முடிகிறது.
ஆனால் இந்த இளம் மருத்துவர்கள் செய்த செயலால் நம் பாரம்பரியம் அழியாமல் காக்கபட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்குள் தோன்றியுள்ளது. பொதுவாக மருத்துவர்கள் என்றால் பேண்ட், ஷர்ட் போட்டு டிப் - டாப்பாக இருப்பார்கள். ஆனால் இந்த இளம் மருத்துவர்கள் அணிந்திருந்த நமது பாரம்பரிய உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே இந்த மருத்துவர்களின் அழகையும், எண்ணங்களைகளையும் அனைவருக்கும் எடுத்துக்கூறி நம் பாரம்பரிய உடை மீது ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு சிறிய முயற்சி தான் இந்தப் பதிவு. இது நிச்சயம் உங்களுக்கு நம் பாரம்பரிய உடை மீது ஆர்வத்தை தூண்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த மருத்துவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் உருவானது. அந்த தேடலில் பழனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அமுதவானன் என்ற மருத்துவரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் அந்த திருமண நிகழ்வைப் பற்றியும் அவர்களைப் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்களைக் கூறினார்.
அப்போது அவர், "நாங்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக படித்தவர்கள். எங்கள் நண்பர்களில் பலர் தமிழகத்தின் முக்கியமான மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று வேலூரில் திருமணம் முடித்த சரண்குமார் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நம் பாரம்பரிய உடையை காக்க வேண்டும் என்ற ஆர்வம் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே எங்களுக்கு தோன்றியது. எங்கள் நண்பர்கள் யார் வீட்டில் எந்த விசேஷங்கள் நடந்தாலும் நங்கள் அனைவரும் நம் பாரம்பரிய உடையில் செல்வதே வழக்கம். அதோடு மட்டுமல்லாமல் எங்கள் அனைவரின் திருமணத்தின் போதும் விழாவிற்கு வரும் அனைவருக்கும் மரக்கன்றுகளை கொடுத்து வருகிறோம்" என்று கூறினார்.