பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரின் தலையை துண்டித்த மர்மநபர்கள்; போலீஸ் வலை வீச்சு
boy killed in chennai for fighting pattasu
சென்னை பெரும்பாக்கம் எழில்நகரில் நடுரோட்டில் பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்டதால், வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கரணை அருகே எழில் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தீப்குமார் (20) மயிலாப்பூரில் உறவினர்களுடன் சேர்ந்து தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளியை தன் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சந்தீப் குமார் மயிலாப்பூரில் இருந்து எழில் நகருக்கு நேற்று முன் தினம் வந்துள்ளார்.
தீபாவளியையொட்டி குடிசை மாற்றுவாரிய குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு ஏராளமானோர் பட்டாசு வெடித்தனர். 5 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தீப் குமார் "ஏன் பட்டாசை இங்கு வெடிக்கிறீர்கள்? சாலையோரத்தில் வெடிக்கக் கூடாதா?" என அவர்களிடம் கேட்டுள்ளார் இதனால் அவருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
தொடர்ந்து அன்று இரவே சந்தீப்குமார் அதே பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் கத்தி, அரிவாளுடன் அங்கு வந்துள்ளனர். அவர்கள் சந்தீப்குமாரை தாக்க முயற்சிக்கவே அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல் அருகில் உள்ள காலி மைதானத்தில் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சந்தீப்குமாரின் கழுத்து, மார்பில் என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சந்தீப்குமார் அதே இடத்தில பலியானார். இருப்பினும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் சந்தீப்குமாரின் தலையைத் தனியாகத் துண்டித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொலை தொடர்பாக தகவலறிந்த பள்ளிக்கரணை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சந்தீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
பட்டாசு வெடிப்பது ஏற்பட்ட தகராறில் தான் சந்தீப்குமார் கொலை செய்யப்பட்டாரா இல்லை வேறு ஏதேனும் முன்விரோதம் இருந்துள்ளதா என்ற நோக்கத்தில் விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா வில் பதிவான வீடியோக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சிலர் கூட்டாக சேர்ந்து சந்தீப்குமாரை அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.