நீதிபதியின் மனைவி மற்றும் மகனை சுட்டது ஏன்; காவலர் பரபரப்பு வாக்குமூலம்...!
why policemen shot judge family

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள சந்தை பகுதியில் நேற்று மதியம் 3.30 மணிக்கு பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்த அந்த இடத்தில் பாதுகாவலர் உடை அணிந்திருந்த ஒரு நபர், தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து நீதிபதி கிருஷ்ணந்த் சர்மாவின் மனைவி மற்றும் மகனை சுட்டுள்ளார்.
இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே ரத்த காயங்களுடன் கீழே விழுந்தனர். அந்த சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களை சுட்டது அவர்களது மெய்காப்பாளராக இருந்த 32 வயதான மஹிபல் சிங் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை சுட்டபின் 3.45 மணியளவில் மஹிபல் சிங் நீதிபதி கிருஷ்ணந்த் சர்மாவை தொடர்பு கொண்டு தங்கள் குடும்பத்தினரை தான் சுட்டு விட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் மஹிபல் சிங்கை அடுத்த இரண்டு மணி நேரத்தில் குர்குரம்-ஃபரிதாபாத் சாலையில் வைத்து கைது செய்தனர். நர்கோல் நகரில் உள்ள புங்கர்கா கிராமத்தை சேர்ந்த சிங், ஏப்ரல் 2017 முதல் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வந்துள்ளார்.
பின்னர் விசாரணையின்போது காவல்துறையினரிடம் பேசிய சிங் தான் அந்த சமயத்தில் மிக மன அழுத்தத்துடன் இருந்ததாகவும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் "நீதிபதியின் குடும்பத்தினர் கூறும் வீட்டு வேலைகளை செய்வதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. இன்று அவர்களை சந்தைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டதால் நான் மிகவும் வெறுப்படைந்தென். அதனால் தான் அவர்களை சுட்டேன்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 38 வயதான ரிது ஷர்மா மற்றும் 18 வயதான துருவ் ஷர்மா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது தலை மற்றும் மார்பு பகுதிகளில் துப்பாக்கி சூடுபட்டுள்ளது.