மஹா புயல் திடீரென அதிதீவிர புயலாக மாறியது! மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Warning for fishermen

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த வாரம் புயல் உருவானது. அதற்கு மஹா என பெயரிடப்பட்டது. அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 30 ஆம் தேதி மஹா புயலாக மாறியது.
இதனால் காற்றின் வேகம் 120 கி.மீட்டர் வரை இருக்கும் என நவம்பர் 4-ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த புயல் நேற்று காலையில் டையூவில் இருந்து தென்மேற்கே 580 கி.மீ. தொலைவிலும், வெரவலில் இருந்து 550 கி.மீ. தென்மேற்கிலும் மையம் கொண்டு இருந்தது.
இந்நிலையில், இந்த புயல் தீவிர புயலாக மாறியது. இதனால் இந்த புயல் திசைமாறி குஜராத் நோக்கி 5ந்தேதி நகர்ந்து செல்ல இருக்கிறது. இதன்பின்னர் தீவிர புயலாக வலு குறைந்து டையூ மற்றும் துவாரகா பகுதிகளுக்கு இடையே 6ந்தேதி இரவு கரையை கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த புயலால் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வரை காற்று வீச கூடும் என்றும், கொங்கன் மற்றும் வடமத்திய மராட்டியத்தில் கனமழை பெய்ய கூடும், மேலும் கடல் சீற்றமுடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.