மாம்பழம் வேணுமா... என் கூட வா பாப்பா தரேன்! 6 வயது சிறுமியை புதருக்குள் வைத்து சீரழித்த காமக்கொடூரன்.... 4 மணி நேரத்தில் அதிரடி ஆக்சன் காட்டிய போலீஸ்...!!!
உத்தரப் பிரதேசத்தின் இட்டாவாவில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை போலீசார் 4 மணி நேரத்திற்குள் என்கவுண்டர் செய்து கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவாவில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் 4 மணி நேரத்திற்குள் என்கவுண்டர் செய்து கைது செய்துள்ளனர். சனிக்கிழமை மாலை நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது காயமடைந்த குற்றவாளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாம்பழம் பறிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
தகவலின்படி, சம்பவத்தன்று மாலை சிறுமி செங்கல் சூளைக்கு அருகிலுள்ள மாந்தோப்புக்கு மாம்பழம் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர், மாம்பழம் தருவதாகக் கூறி சிறுமியை அருகிலிருந்த புதர்களுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் அங்கிருந்து தப்பியோடிய சிறுமி, அழுதபடி வீட்டுக்கு வந்து நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
4 மணி நேரத்தில் குற்றவாளி சிக்கினார்
புகாரின் பேரில் போலீசார் உடனடியாக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டையில் சில மணி நேரங்களிலேயே சந்தேக நபர் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவனது பெயர் நிதின் என்ற பிரஹலாத் என்பது தெரியவந்தது.
மேலும், சம்பவத்தின் போது பயன்படுத்திய சில சாட்சியங்களை மறைத்து வைத்திருப்பதாக அவன் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி அவனை சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அரசுத் துப்பாக்கி பறித்து தப்ப முயற்சி
அங்கு சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் குல்தீப் சிங்கிடம் இருந்த அரசுத் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சுட்டுவிடுவதாக மிரட்டியவாறு ஓட முயன்றதால், போலீசார் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் குற்றவாளியின் காலில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த அவனை போலீசார் உடனடியாகக் கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பினர். குற்றவாளியிடமிருந்து அரசுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெண் டி.எஸ்.பி ஆயுஷி சிங் கூறுகையில், காயமடைந்த நிதினுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குணமடைந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.