விளையாடச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி; கண்ணீரில் குடும்பத்தினர் & உறவினர்கள்.!
விளையாடச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி; கண்ணீரில் குடும்பத்தினர் & உறவினர்கள்.!
நீர் நிரம்பியுள்ள இடத்திற்கு அருகே குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோரின் செயல், பள்ளத்தை வெட்டி வைத்த நபரின் பேரலட்சியம் 2 உயிரை பறிக்க காரணமாக அமைந்தது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரியா மாவட்டம், பவுண்ட் கிராமத்தில் வசித்து வருபவர் ராம் தர்ஷன் யாதவ். இவரின் மகள் பயால் (வயது 11). சிறுமி அங்குள்ள தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்தவர் அவதேஷ் யாதவ். இவரின் மகள் மீனாட்சி (வயது 10). சிறுமி மேற்கூறிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
பயாலும் - மீனாட்சியும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இருவரும் வழக்கம்போல பள்ளிக்கு சென்றனர். பின் வீட்டிற்கு திரும்பிய சிறுமிகள் விளையாட சென்றனர். இவர்கள் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால், பதறிப்போன குடும்பத்தினர் அங்குள்ள பல பகுதிகளில் தேடி இருக்கின்றனர்.
இதனிடையே, சிறுமிகள் வைத்து விளையாடிய பொம்மை ஒன்று, அங்குள்ள பள்ளிக்கு அருகே இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரின் கரையில் இருந்துள்ளது. இதனால் சிறுமிகள் நீரில் விழுந்து இருக்கலாம் என்ற அச்சத்தில் கிராமத்தினர் அதில் இறங்கி சோதித்தபோது, அது உண்மை என்பது அம்பலமானது.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரியவரவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.