தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ரூ.50,000..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையம் இரண்டாவது நடைமேடையில் பெண் ஒருவர
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையம் இரண்டாவது நடைமேடையில் பெண் ஒருவர் அவரது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தாயின் கையை பிடித்துக்கொண்டு நடைமேடையில் விளிம்பில் நடந்து சென்ற குழந்தை, திடீரென தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது ரயில் வேகமாக வருவதை உணர்ந்த தாய், செய்வதறியாது தவித்துள்ளார்.
அந்த சமயத்தில், ரயிலுக்கு எதிர் திசையிலிருந்து தண்டவாளத்தில் ஓடி வந்த ரயில்நிலைய பணியாளர் மயூர் ஷெல்க் என்ற நபர் குழந்தையை தூக்கி நடைமேடை மீது தள்ளிவிட்டு, விளிம்பில் தானும் நடைமேடையில் ஏறி தப்பியுள்ளார். ரயில் தன் மீது மோத இருந்த சில வினாடிகளுக்குள் தாவி மேலே ஏறி தப்பித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை மத்திய ரயில்வே டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சரியான நேரத்தில் சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் சிக்கிய குழந்தையை மீட்ட ரயில்நிலைய பணியாளர் மயூர் ஷெல்க்கேவுக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், மயுர் ஷெல்கேவுக்கு சன்மானமாக 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.