இது என்னய்யா புது ட்ரெண்டா இருக்கு! தெலுங்கனாவில் செருப்பு வாங்கி கொடுத்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்
seeking for votes by providing chapel to people
தெலுங்கனா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தம்மை அடிக்க தாமே வாக்காளர்களிடம் செருப்பு வழங்கி வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தெலுங்கனாவில் வரும் டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்நிலையில், ஜெகத்தியாலா மாவட்டம், கொரட்டாலா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஆக்குல அனுமந்தலு என்பவர் போட்டியிடுகிறார். இவர் நேற்று மெடுபல்லி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தன்னுடைய ஆதரவாளர் ஒருவரிடம் பெட்டி நிறைய செருப்புகள், மற்றும் ராஜினாம கடிதத்தை எடுத்து வர செய்தார்.
அவ்வாறு எடுத்து வந்த செருப்பு மற்றும் ராஜினாமா கடிதத்தை வீடு வீடாக கொடுத்து "நான் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின், மக்களுக்கு சேவை செய்ய தவறினால் இப்போது கொடுக்கும் இந்த செருப்பால் என்னை அடியுங்கள், நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வைத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யுங்கள்" என்று கூறி வாக்கு சேகரித்தார். இவரின் இந்த பிரச்சாரம் அந்த தொகுதி மக்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.