நீதி கிடைத்துவிட்டது! எனது மகளுக்கு மட்டுமல்ல.... மனம் தளராது போராடிய நிர்பயாவின் தாயார் கண்ணீர் பேட்டி!
Nirpaya mother happy interview

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 5 கொடூர மிருகங்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பலரும் நிர்பயாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளாக பேருந்து ஓட்டுனர் ராம்சிங், முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார், மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் 17 வயது சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மேலும் பேருந்து ஓட்டுனரான ராம்சிங் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதனைத்தொடர்ந்து திகார் சிறையில் இருந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5. 30மணியளவில் நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பல போராட்டங்களுக்கு இடையே மனம் தளராமல் நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டுமென கடுமையாக போராடியவர் நிர்பயாவின் தாய் தூக்கு தண்டனை நிறைவேற்றியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் தனது மகளின் புகைப்படத்தை கட்டியணைத்து கண்ணீர் விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது மகள் நிர்பயாவிற்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இந்த நாளை நாட்டின் மக்களுக்காக சமர்ப்பணம் செய்கிறேன். இது எனது மகளுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் கிடைத்த நீதி என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.