SBI வங்கியில் மிளகாய் பொடியை ஊழியர்கள் கண்களில் வீசி கொள்ளை...! அடுத்த 30 நிமிடத்தில் பாய்ந்த போலீஸ்.... சிக்கிய சிசிடிவி காட்சி!!!
நாக்பூரில் எஸ்பிஐ வங்கியில் மிளகாய் பொடியை ஊழியர்களின் கண்களில் வீசி ரூ.4 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நாக்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் மிளகாய் பொடியை வீசி ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளர் போல வங்கிக்குள் நுழைந்த அவர், ஊழியர்களை திசைதிருப்பி பணத்துடன் தப்ப முயன்றார். ஆனால், வங்கி ஊழியர்கள் மற்றும் போலீசார் விரட்டிச் சென்று 30 நிமிடங்களுக்குள் அவரை பிடித்தனர்.
வாடிக்கையாளர் போல வந்து மிளகாய் பொடி வீச்சு
சுராஜ் போஜராஜ் போர்க்கர் என்பவர் சம்பவத்தன்று நாக்பூரில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு சாதாரண வாடிக்கையாளர் போல வந்துள்ளார். பின்னர் பணப் பரிவர்த்தனை நடைபெறும் பகுதிக்கு சென்ற அவர், மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை திடீரென அங்கிருந்த ஊழியர்களின் கண்களில் வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் வங்கி ஊழியர்கள் சற்று நிலைகுலைந்த நிலையில், அங்கு ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி ரூ.4 லட்சம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு சுராஜ் தப்பியோட முயன்றுள்ளார். அவர் பணத்துடன் வெளியேறிய காட்சிகள் உள்ளிட்ட வங்கி சிசிடிவி காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகியுள்ளன.
ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று கைது
வங்கியில் இருந்த ஊழியர்களும், அங்கிருந்த போலீசாரும் உடனடியாக அவரை விரட்டிச் சென்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில், 30 நிமிடங்களுக்குள் சுராஜை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.4 லட்சம் ரொக்கம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலையில்லாததால் கொள்ளை முயற்சியா?
பி.எஸ்பி பட்டதாரியான சுராஜ் தற்போது வேலை இல்லாமல் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் பணத்தேவைக்காக அவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில், இந்த முயற்சியின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கியில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.