கொரோனோவால் 15 ஆண்டுகள் கழித்து இணைந்த தாயும் மகனும்..! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்.!
Mother and son rejoined after 15 years due to lockdown

கொரோனா ஊரடங்கு உத்தரவால் 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தாயும் அவரது மகனும் மீண்டும் ஓன்று சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் லட்சுமி. சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்துவந்த லட்சுமி தனது கணவன் இறந்தபிறகு தனது இரண்டு மகள்கள் மற்றும் 5 மகன்களுடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் சினிமா ஆசை காரணமாக லட்சுமியின் மூன்றாவது மகன் பாண்டியராஜன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனை அடுத்து சென்னை சென்ற அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வயிற்று பிழைப்புக்கு பேப்பர் கடை ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தங்குவதற்கு, சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அவதிப்படுவந்துள்ளார் பாண்டியராஜன்.
இந்நிலையில், மீண்டும் தனது சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்த பாண்டியராஜன் சென்னையில் இருந்து நடந்தும், லாரி மூலமும் நேற்று இரவு சாத்தூருக்கு வந்து சேர்ந்துள்ளார். 15 வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்த்த லட்சுமி அவரை கண்ணீர் மல்க வரவேற்றுள்ளார்.
பாண்டியராஜன் சென்னையில் இருந்து வந்ததால் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதியானதை அடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
15 வருடத்திற்கு முன் பிரிந்த மகனும், தாயும் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.