ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
Modi meeting with chief ministers
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் 6400பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர். 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், சில அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் முடிந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இது தொடர்பாக கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய போது, நாட்டில் சமூக நெருக்கடி நிலை போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதால் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு இருப்பதாக மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் மாநில முதல் அமைச்சர்களுடன் மீண்டும் பேசுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே இந்த கூட்டத்துக்கு பிறகு தான் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்றும், அவ்வாறு நீடித்தால், எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.