விழாவுக்கு தாமதக வந்த காரணத்தால் தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக்கொண்ட அமைச்சர்! வியந்துபோன மக்கள்!
minister fined myself for late
தெலங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சகோதரி மகன் ஹரீஷ் ராவ். இவர் தற்போது தெலங்கானா மாநில நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானாவை தனியாக பிரிக்க வேண்டும். தெலங்கானா மக்களுக்கு போதிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் ஹரீஷ் ராவ்.
இவர் சந்திரசேகர ராவிற்கு பக்க பலமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து புதிதாக அமைந்த தெலங்கானா மாநிலத்தில் ஹரீஷ் ராவிற்கு இரண்டுமுறை அமைச்சர் பதவி வழங்கபட்டுள்ளது.
இந்நிலையில் சித்திபேட்டா மாவட்டம், துப்பாக்கா நகராட்சி சார்பில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் விழா நேரம் தொடங்கி நீண்ட நேரமாகியும் அமைச்சர் வரவில்லை. இந்தநிலையில் நேரம் கடந்த நிலையில் அமைச்சர் ஹரீஷ் ராவ் விழாவுக்கு தாமதமாக வந்தார்.
இதனையடுத்து மக்களிடையே பேசிய அமைச்சர் ஹரீஷ் ராவ், நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டார். மேலும் விழாவிற்கு தாமதத்துக்காக தனக்குத் தானே ரூ,50 லட்சம் அபராதம் விதித்துக்கொள்வதாக மக்களிடையே அறிவித்தார்.
இந்த தொகையை கொண்டு மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அமைச்சரின் செயலுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.