வாட்ஸ் அப்பில் வந்த திவ்யா பெண் மெசேஜ்! வங்கி கணக்கில் வந்த பணத்தை நம்பி ரூ.21 கோடியை முதலீடு செய்த ஆடிட்டர்.. ஒரே இரவில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!!
மத்தியப் பிரதேசத்தில் 70 வயது ஆடிட்டர் ஒருவர் கிரிப்டோ முதலீட்டு மோசடியில் ரூ.21 கோடிக்கும் மேல் இழந்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் தொடங்கிய மோசடி குறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 70 வயதான ஆடிட்டர் ஒருவர், வாட்ஸ்அப் மூலம் வந்த முதலீட்டு ஆலோசனையை நம்பி கிரிப்டோ மோசடி வலையில் சிக்கி ரூ.21 கோடிக்கும் அதிகமான தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மோசடி கும்பலை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் செய்தியில் தொடங்கிய மோசடி
தகவலின்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆடிட்டர் அசோக் விஜயவர்கியாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் எண்ணில் இருந்து முதலீட்டு ஆலோசனை வழங்கும் வகையில் குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர் திவ்யா என அறிமுகமான பெண், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, போலியான இணையதளத்தில் அவரை கணக்கு தொடங்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: 120 பேருடன் உடலுறவு.... மனைவிக்கு போதை மருந்து கொடுத்து கணவன் செய்த கொடூரம்! மிரட்டல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த பகீர் பின்னணி!!!
நம்பிக்கை ஏற்படுத்திய முதல் லாபம்
ஆரம்பத்தில் செய்யப்பட்ட சிறிய முதலீட்டுக்கு ரூ.1.88 லட்சம் லாபமாக அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பப்பட்டதால், அந்த முதலீட்டு தளம் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது சொந்தப் பணத்துடன் தொழில் கூட்டாளிகளின் முதலீட்டையும் சேர்த்து ரூ.21 கோடிக்கும் அதிகமான தொகையை அந்த தளத்தில் முதலீடு செய்துள்ளார்.
ரூ.33 கோடி லாபம் காட்டி ஏமாற்றம்
சில நாட்களில் அவரது கணக்கில் ரூ.33 கோடிக்கும் மேல் லாபம் இருப்பதாகக் காட்டப்பட்டது. ஆனால் அந்தத் தொகையை எடுக்க முயன்றபோது கணக்கு முடக்கப்பட்டதுடன், வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கூடுதல் பணமும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக தேசிய சைபர் குற்றப்பிரிவுயில் புகார் அளித்தார்.
தீவிர விசாரணையில் போலீசார்
முதற்கட்ட விசாரணையில், மோசடியாகப் பெறப்பட்ட பணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான போலி வங்கிக் கணக்குகளுக்கு பல அடுக்குகளாக மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை ரூ.2 கோடி மட்டுமே முடக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணத்தை மீட்கவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.