காதலனை மிரட்ட பிறந்த குழந்தையை கடத்திய காதலி.. அதிர்ந்துபோன போலீஸ், கதறிய தாய்.!
காதலனை மிரட்ட பிறந்த குழந்தையை கடத்திய காதலி.. அதிர்ந்துபோன போலீஸ், கதறிய தாய்.!
தன்னை காதலித்து பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலனை மிரட்ட மருத்துவமனையில் குழந்தையை திருடிய பெண்மணி கைது செய்யப்பட்டார். குழந்தை கடத்தப்பட்ட 2 மணிநேரத்தில் மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள வண்டிப்பெரியாறு, வழியத்தாரா பகுதியை சார்ந்தவர் ஸ்ரீஜித். இவரின் மனைவி அஸ்வதி. அஸ்வதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக அவரை கோட்டயம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதி செய்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக அஸ்வதிக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிரசவ வார்டில் தங்கியிருந்த அஸ்வதியிடம் நேற்று மாலை நர்ஸு உடையணிந்து வந்த பெண்மணி, குழந்தையை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி குழந்தையை வாங்கி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் பெண் திரும்பி வராததால், அஸ்வதி மருத்துவர்களிடம் சென்று கேட்டுள்ளார். அப்போதுதான் உண்மை புரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறவே, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மருத்துவமனை கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்கையில், பெண்ணொருவர் குழந்தையுடன் மருத்துவமனையை விட்டு வெளியே செல்வது அம்பலமானது.
காவல் துறையினர் பெண்ணின் புகைப்படத்தை சேகரித்து, அவரை தேடும் பணிகளை தொடங்கிய நிலையில், மருத்துவமனைக்கு வெளியே பெண்மணி கடை முன்பு நின்றுள்ளார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், அவரிடம் இருந்த குழந்தை மீட்கப்பட்டது. குழந்தை கடத்தப்பட்ட 2 மணிநேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையை கடத்தி சென்ற பெண்ணிடம் நடந்த விசாரணையில், அவர் எர்ணாகுளம் களமச்சேரி பகுதியை சார்ந்த நீது ராஜ் (வயது 33) என்பது தெரியவந்தது. நீது ராஜ் இப்ராஹிம் என்பவரை காதலித்து வந்த நிலையில், இப்ராஹிம் திருமணம் செய்வதாக கூறி நீது ராஜுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
மேலும், நகை, பணம் என ரூ.30 இலட்சம் வரை பெற்றுக்கொண்ட நிலையில், இப்ராஹிம் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனை அறிந்த நீது காதலனை மிரட்ட முடிவு செய்து, மருத்துவமனைக்கு வந்து குழந்தையை கடத்தி இருக்கிறார். நீதுராஜ் கொடுத்த தகவலின் இப்ராஹீமை கைது செய்த அதிகாரிகள், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.