வினோத வாழ்க்கை! 10 வருஷமாக சாப்பாட்டையே தொடல! இலைகள் தான் உணவு.... குரங்குகளை பார்த்து வாழ்க்கை முறையை மாற்றிய வாலிபர்! விசித்திரமான பின்னணி!
கர்நாடகாவில் 10 ஆண்டுகளாக இலைகளை மட்டுமே உணவாகக் கொண்டு வாழும் மனிதர் கவனம் ஈர்த்துள்ளார். வினோத வாழ்க்கை முறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் அடிக்கடி வினோத வாழ்க்கை முறைகள் பேசுபொருளாக மாறும் நிலையில், கர்நாடகாவில் வாழும் ஒருவரின் வினோத வாழ்க்கை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சாதாரண மனிதர்களைப் போல இல்லாமல், கடந்த 10 ஆண்டுகளாக இலைகளை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார் இந்த நபர்.
10 ஆண்டுகளாக இலைகளே உணவு
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான புதன் கான் ஹோஸ்மானி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காட்டில் குரங்குகள் இலை தழைகளை சாப்பிடுவதை கவனித்துள்ளார். அதைப் பார்த்து, ‘நாமும் இதைப் பயன்படுத்த முடியாதா?’ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
அதன் பிறகு, மெதுவாக சாதம், சப்பாத்தி போன்ற வழக்கமான உணவுகளை தவிர்த்து, இலைகளைச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். இப்போது அவர் வசிக்கும் மலைப்பகுதியில் கிடைக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட மூலிகை இலைகளையே தனது இலை உணவு முறையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாளில் 6 முறை இலைகள்
புதன் கான் ஒரு நாளுக்கு 6 முறை வரை இலைகளை மட்டும் சாப்பிடுகிறார். அரிதாகவே ஊருக்குள் வரும்போது மட்டும் ஒரு கப் டீ குடிப்பதாக கூறப்படுகிறது. மற்ற எந்த வகை உணவையும் அவர் எடுத்துக் கொள்வதில்லை.
உடல்நலக்குறைவு இல்லை என்ற ஆச்சரியம்
புரதம், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகள் இல்லாமல், வெறும் இலைகளை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்தும் கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இவ்வாறான வினோத வாழ்க்கை முறைகள் சமூகத்தில் பெரும் விவாதத்துக்குரியதாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது போன்ற உணவுமுறைகளை மருத்துவ ஆலோசனையின்றி பின்பற்றுவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.