வீட்டை மாற்றியும் சந்தேகம் தீரவில்லை.. நண்பரை தேடிச்சென்று செய்த கொடூரம்!
வீட்டை மாற்றியும் சந்தேகம் தீரவில்லை.. நண்பரை தேடிச்சென்று செய்த கொடூரம்!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபல்லி அருகே, மனைவியுடன் நண்பர் ஒருவர் திருமணத்துக்கு மீறிய உறவில் இருப்பதாக சந்தேகித்த நபர், அவரை மதுக்கடையில் வைத்து கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தமவாரப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடையில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நாகராஜு (42) என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து அங்கு வந்த ஆதிநாராயணா என்பவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜுவை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் நாகராஜு பலத்த காயமடைந்து அதிகளவில் ரத்தம் வெளியேறிய நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய ஆதிநாராயணாவை பிடிக்க பாகேபல்லி போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடூர சம்பவம்.. வெளியான சிசிடிவி காட்சியால் பெங்களூருவில் அதிர்ச்சி!
இந்நிலையில், செப்டம்பர் 14ஆம் தேதி சிக்பள்ளாப்பூர் பேருந்து நிலையத்தில் ஆதிநாராயணாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதிநாராயணா மற்றும் நாகராஜுவின் குடும்பத்தினர் நீண்ட காலமாக நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மனைவிக்கும் நாகராஜுவுக்கும் திருமணத்துக்கு மீறிய தொடர்பு இருப்பதாக ஆதிநாராயணாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்த பிறகும் அவரது சந்தேகம் நீடித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவத்தன்று நாகராஜுவை பின்தொடர்ந்து சென்ற ஆதிநாராயணா, தனது மனைவியுடன் ஏன் பேசுகிறாய் எனக் கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் ஆத்திரத்தில் கத்தியால் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: பொதுமக்களே உஷார்.. பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!