கொடூரத்தின் உச்சம்! ரூ.5000 கடனுக்காக 2 பிள்ளைகளின் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரன்! டீ குடிக்க கூப்பிட்டு பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடூரம்!!!
குஜராத் மாநிலம் பாட்டன் மாவட்டத்தில் ரூ.5,000 கடன் தொடர்பான தகராறில் இளம் கைம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பாட்டன் மாவட்டத்தில் ரூ.5,000 கடன் தொடர்பான தகராறு கொடூரமான குற்றமாக மாறியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான 35 வயது கைம்பெண் பிங்கிபென் பாட்னி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக அண்டை வீட்டைச் சேர்ந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.5,000 கடன் வாங்கிய பெண்ணுக்கு தொடர் தொல்லை
தகவலின்படி, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த பிங்கிபென் பாட்னி, தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு அண்டை வீட்டைச் சேர்ந்த பாபுபாய் ராவலிடம் ரூ.5,000 கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு அவர் அடிக்கடி வற்புறுத்தியதுடன், பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறவும் முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் பிங்கிபென் அதை உறுதியாக மறுத்ததாக கூறப்படுகிறது.
டீ வாங்கி வருவதாக கூறி பெட்ரோலுடன் திரும்பிய நபர்
கடந்த ஜூலை 12-ஆம் தேதி பிரச்சினையை பேசித் தீர்க்கலாம் என்று கூறி, உள்ளூரைச் சேர்ந்த ஜீதுபாய் பாஞ்சாலின் வீட்டருகே வருமாறு பாபுபாய் அழைத்துள்ளார். பிங்கிபென் தனது மகளுடன் அங்கு சென்றிருந்தார். கடனை உடனே திருப்பித் தருமாறு அவர் வற்புறுத்தியபோது, இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், டீ வாங்கி வருகிறேன் என்று கூறி அங்கிருந்து சென்ற பாபுபாய், சிறிது நேரத்தில் பெட்ரோலுடன் திரும்பி வந்து பிங்கிபென் மீது ஊற்றி தீவைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இறப்பு வாக்குமூலத்துக்குப் பிறகு உயிரிழப்பு
பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபுபாய் ராவல் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். மறுபுறம், உயிருக்கு போராடிய பிங்கிபென், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரேஷ் ரேணுகா முன்னிலையில் தனது இறப்பு வாக்குமூலத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.