பேத்திக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பொய் புகார்,.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த முன்னாள் அமைச்சர்..!
பேத்திக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பொய் புகார்,.. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த முன்னாள் அமைச்சர்..!
முன்னாள் மந்திரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்ரகாண்ட் மாநில முன்னாள் மந்திரி ராஜேந்திர பஹுகுணா தன்னுடைய பேத்திக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவருடைய மருமகள் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ராஜேந்திர பஹுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டு குறித்து 59 வயதான ராஜேந்திர பஹுகுணா மிகுந்த மன அழுத்தத்திலும், கவலையிலும் இருந்துள்ளார். இதன் காரணமாக, கடந்த புதன்கிழமையன்று அவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கொடூர முடிவை அவர் எடுத்துள்ளார்.
மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அவர் பலமுறை காவல் துறையின் அவசர எண்ணான 112இல் அழைத்து தற்கொலை செய்து கொள்ளும் தனது திட்டம் குறித்து தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினர் பஹுகுணாவின் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
காவல்துறையினரை பார்த்ததும் பஹுகுணா, தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று, பின் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்த காவல்துறையினர் அவரை தற்கொலை செய்து கொள்ளவிடாமல் தடுக்க முயன்றனர்.
ஆனால் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக திரும்ப திரும்பக் கூறிய ராஜேந்திர பஹுகுணா, திடீரென துப்பாக்கியை எடுத்து மார்பில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையில், அவரது மகன் அஜய் தனது தந்தையை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவி, மற்றும் மாமனார் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் மீது புகார் அளித்தார். முன்னாள் மந்திரி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர பஹுகுணா, உத்தராகண்டில் 2004-05ஆம் ஆண்டில் என்.டி.திவாரி அரசில் இணை மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.