"மக்களே உஷார்!" இந்தியாவில் நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு; காரணம் இதுதான்
demand for indian coins

இந்தியாவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என பல்வேறு நாணயங்கள் இந்திய அரசால் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு நாணய வகைகள் புழக்கத்தில் இருந்த இந்தியாவில் இப்பொழுது இந்த குறிப்பிட்ட நாணயங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
இப்போது புழக்கத்தில் இருக்கும் இந்த நாணயங்களை தயாரிப்பதற்காக ஆகும் செலவினை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக ஒரு ரூபாய் நாணயம் தயாரிப்பதற்கு ஆகும் செலவு அதன் மதிப்பை விட அதிகமாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு ரூபாய் மதிப்பும் அதன் பயன்பாடும் மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்த நாணயங்கள் அனைத்தும் மும்பை மற்றும் ஹைதராபாதில் உள்ள நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிப்பதற்காக ஒரு நாணயத்திற்கு ஒரு ரூபாய் 11 காசுகள் செலவாகின்றன. மேலும் இரண்டு ரூபாய் நாணயத்திற்கு ஒரு ரூபாய் 28 காசுகளும் ஐந்து ரூபாய் நாணயத்திற்கு மூன்று ரூபாய் 69 காசுகளும் பத்து ரூபாய் நாணயத்திற்கு ஐந்து ரூபாய் 54 காசுகளும் செலவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செலவினங்களை கருத்தில் கொண்டு நாணயங்களை தயாரிக்கும் எண்ணிக்கையை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு குறைத்துள்ளது. கடந்த ஆண்டு 903 மில்லியன் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயங்கள் இந்த 2018ம் ஆண்டில் 630 மில்லியன் ஆக குறைக்கப்பட்டுள்ளது.