அதிவேக அரசு பேருந்து மோதி பயங்கரம்.. 2 பேர் பலி.. பேருந்துக்கு தீ வைப்பு.. மக்கள் கொந்தளிப்பு.!
டெல்லி நங்லோய் பகுதியில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பேருந்துகளை சேதப்படுத்தி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேருந்துகள் ரேஸ் வைத்ததால் விபத்து ஏற்பட்டு இருவர் பலியான நிலையில், பொதுமக்கள் பேருந்துக்கு தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிவேகத்தில் நடந்த விபத்து:
டெல்லியின் நங்லோய் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக சென்ற அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முதலில் ஒரு ஸ்கூட்டரை மோதி, பின்னர் அங்கிருந்த ஈ-ரிக்ஷா, பைக் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் விபத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொத்து கொத்தாக பலி.. அதிர்ச்சி சம்பவம்.!
இருவர் பரிதாப பலி:
இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணம் செய்த இளைஞர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ரவிகாந்த் (32) மற்றும் கமல்ஜீத் (39) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த ஒரு பெண் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரேஸ் மோகத்தால் சோகம்:
விபத்து நடந்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து நடந்த நேரத்தில் இரண்டு அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று ரேஸ் போட்டதாகவும், அதுவே இந்த விபத்துக்கு காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் கோபமடைந்த சிலர் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து சேதப்படுத்தியதுடன் அதற்கு தீ வைத்தனர்.
பேருந்து ஓட்டுநர் கைது:
அதே சாலையில் வந்த மற்றொரு அரசு பேருந்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் 5 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பேருந்து ஓட்டுநர் தீபக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.