கரையை கடக்கிறது புயல்: மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம்!. 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று!.
cyclone alert

கடந்த இரண்டு மாதங்களில் கடுமையான மழை, வெயில், புயல், வறட்சி என்று கால நிலை இருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு உருவாகிய 'பபுக்' புயல், அந்தமான் தீவுகளை கடந்து, மத்திய வங்க கடலுக்குள் நுழையும் எனவும், அதன்பின், வட கிழக்கு திசையில் நகர்ந்து, மியான்மர் செல்லும் எனவும் வானிலை ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள பபுக் புயல் இன்று மாலை அல்லது இரவில் அந்தமான் தீவில் கரையைக் கடக்கவுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் இன்றும் நாளையும் அந்தமான் தீவின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த பபுக் புயல் கரையை கடக்கும்போது அந்தமானில் மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், அது மியான்மர் கடலை நெருங்கி வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.