சரியாக பரிசோதிக்காமல், கொரோனா பரிசோதனையில் அலட்சியம் காட்டிய அதிகாரி.! வைரல் வீடியோ!
Corono screening passengers in Tumkur Railway station issue
கர்நாடகாவின் டுமக்குரு மாவட்டத்தில் ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளை சரியாக சோதிக்காமல், அலட்சியமாக நாற்காலியில் அமர்ந்து போன் பேசிக்கொண்டு இருந்த சுகாதார உதவி ஆய்வாளர் ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸை தடுக்க இந்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக மக்கள் கூட்டம் கூடும் ரயில் நிலையங்களில் கொரோனா குறித்து பரிசோதிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் டுமக்குரு மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் சுகாதார உதவி ஆய்வாளர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து போன் பேசிக்கொண்டே, ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகளை முறையாக பரிசோதிக்காமல், பயணிகளின் முகத்தை கூட சரியாக பார்க்காமல் பயணிகள் செல்லும் திசையில் மட்டுமே இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டரை காண்பித்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற, தற்போது அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் மத்திய அரசின் கீழ் ரயில்வே துறையில் வேலை பார்ப்பவர் இல்லை என்றும், மாநில அரசால் அவசர கால சுகாதார நடவடிக்கைக்காக ரயில்வே நிலைய பரிசோதனை பணியில் அமர்த்தப்பட்டவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.