அழகான பெண்களை சந்திக்க ஆசைப்பட்ட இளைஞர்..! அடுத்தடுத்து வந்த தொலைபேசி அழைப்புகள்..! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.!
Central security officer lost money by online forgery

அழகான பெண்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறி மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவரிடம் மோசடி கும்பல் சுமார் 11 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மஜ்காவ் டாக்யார்டு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிவருபவர் மாதேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், முகநூல் வழியாக 'மேக் மை பிரண்ட்' என்ற இணையதளம் குறித்து அறிந்துள்ளார்.
இந்த வலைதள பக்கத்தில் பதிவு செய்வதன் மூலம், அழகான பெண்களுடன் நெருங்கி பழகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. இதனால், பெண்கள் மீது கொண்ட ஆசையில், மாதேஷ் தனது விவரங்களை கொடுத்து, அந்த வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் பதிவு செய்த அடுத்த நாள், இளம் பெண் ஒருவர் தொடர்புகொண்டு, நீங்கள் இந்த வலைதளத்தில் உறுப்பினராக வேண்டுமென்றால் 920 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். மாதேஷும் உடனே 920 பணம் செலுத்தியுள்ளார். பின்னர், வேறொரு பெண் கால் செய்து, அழகான பெண்களை நீங்கள் சந்திக்கவேண்டும் என்றால் 20,000 பணம் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி 20,000 பணத்தை செலுத்தியுள்ளார் மாதேஷ். இதனை அடுத்து சில பெண்களின் தொலைபேசி எண்கள் மாதேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பெண்ணின் எண்ணை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் பேசிவந்துள்ளார் மாதேஷ். அந்த பெண்ணும் பல காரணங்களை கூறி மாதேஷிடம் இருந்து அடிக்கடி பணம் வாங்கியுள்ளார்.
இப்படியாக வெறும் 17 நாட்களில் அந்த கும்பல் பாதுகாப்பு படை வீரரிடம் சுமார் 11 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது. இவ்வளவு பணம் செலுத்தியும், எந்த பெண்ணும் தன்னை சந்திக்க வராத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்துள்ளார் மாதேஷ்.
உடனே இதுகுறித்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு படை வீரரை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர். அழகான பெண்களை சந்திக்கவேண்டும் என்ற ஆசையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 11 லட்சம் வரை ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.