30 ரூபாய் வீண் பழியால் பரிதாபமாக உயிரிழந்த எட்டாம் வகுப்பு மாணவி! பெங்களூரு பள்ளியில் நடந்த அந்த கொடூரம்..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பள்ளியில் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகக் கூறி எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் அனேக்கல் தாலுகா மரசூரு கிராமத்தில், பள்ளியில் பணம் திருடியதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார், சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு குற்றச்சாட்டு குறித்து எழுதிய கடிதம்
அரசுப் பள்ளியில் படித்து வந்த மாணவி, வியாழக்கிழமை இரவு வீட்டில் உறங்கச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், பள்ளியில் 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் திருடியதாகத் தன் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாகவும், ஆசிரியர்கள் கண்டித்ததால் ஏற்பட்ட அவமானத்தையும் மன உளைச்சலையும் தாங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயின் வேதனை; விசாரணை தீவிரம்
கடிதத்தில், தனது முடிவுக்கு யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம் என்றும், குறிப்பாக தனது தாயை பொறுப்பாக்க வேண்டாம் என்றும் மாணவி எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியின் தாய், வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், பள்ளியில் ஏற்பட்ட சூழலே மகளை இந்த முடிவுக்கு தள்ளியதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Police Investigation தொடர்ந்து வருகிறது
இந்த மாணவி உயிரிழப்பு தொடர்பாக சூர்யாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி எழுதிய கடிதம், ஆசிரியர்களின் நடவடிக்கைகள் மற்றும் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "அம்மா.. என் செல்போனை செக் பண்ணுங்க, எல்லாமே இருக்கு!" - தற்கொலைக்கு முன் இளம்பெண் வெளியிட்ட அந்த ஆடியோ. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!