சினிமாவில் வருவதுபோல் சாலையில் கொத்து கொத்தாக மயங்கி விழுந்த மக்கள்..! விபத்தை நேரில் பார்த்தவர் வேதனை- வீடியோ..!
Andhra gas leak witness video

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர் ஆர்வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே இயங்கிவரும் எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலையில் இன்று காலை ஏற்பட்ட விஷவாயு கசிவால் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும், 1000 துக்கும் அதிகமானோர் மயக்கமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த திடீர் விஷவாயு கசிவால் ரசாயன ஆலையின் அருகில் இருந்த மூன்று கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்துசென்ற மக்கள் திடீர் மூச்சுத்திணறலால் சாலையில் மயங்கி விழுந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், இன்று அதிகாலையில் தொழிற்சாலையில் இருந்து கசிந்த ரசயான புகையால் இந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. எங்களுக்கு எங்கே ஓடுவது என்று கூட தெரியவில்லை. இங்கு இருந்த மக்கள் நடந்து கொண்டிருந்தபோதே மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர் என கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.