கொரோனா பராமரிப்பு மைய தீ விபத்தின் உயிரிழப்பு அதிகரிப்பு! ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி!
andhra fire accident relief fund
ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத நிலையில், அங்கிருக்கும் ஓட்டல்களில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை அமைத்து மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதுவரை அந்த தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.