11 வயது சிறுவன்... தாய் இறந்தது தெரியாமல் தாய் பிணத்துடன்; இரண்டு நாட்கள் தனியாக இருந்த பரிதாபம்..!!
11 வயது சிறுவன்... தாய் இறந்தது தெரியாமல் தாய் பிணத்துடன்; இரண்டு நாட்கள் தனியாக இருந்த பரிதாபம்..!!
பெங்களூரு யஷ்வந்தபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அன்னம்மா (45). இவருக்கு 11 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளான். அன்னம்மாவின் கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். எனவே அன்னம்மா கூலி வேலை செய்து தன்னுடைய மகனை வளர்த்து வந்தார்.
அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்துள்ளது. இந்நிலையில், தன்னுடைய மகனுடன் படுத்து தூங்கிய அன்னம்மா குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தூங்கும் போதே உயிரிழந்திருந்தார். சிறுவன் சூர்யா தன்னுடைய தாய் உயிரிழந்தது தெரியாமல், அவர் தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து கொண்டு இருந்தான். வீட்டில் இருந்த பணத்தை எடுத்து சென்று, கடைக்கு போய் உணவு வாங்கி இரண்டு நாட்களாக சாப்பிட்டு வந்துள்ளான்.
கடைக்கு சென்ற போது சூர்யாவின் தந்தையின் நண்பர்கள் சிலர், அவனிடம் பேசியுள்ளனர். அப்போது இரண்டு நாட்களாக தாய் தன்னிடம் பேசுவதில்லை, தூங்கி கொண்டே இருக்கிறார் என்று கூறியுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் சிறுவனின் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர்.
அப் போது அன்னம்மா, இரண்டு நாட்களுக்கு முன்பாகவே உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது தெரிந்தது. அதன் பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஆர்.டி.நகர் காவல்துறையினர் விரைந்து வந்து அன்னம்மா உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தது பற்றி அறியாமல், அவரது பிணத்துடன் இரண்டு நாட்கள் சிறுவன் இருந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.