நாளைய பொதுக்குழு கூட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்பார்களா? - கூடுகிறது எதிர்பார்ப்பு!!
SOUTH INDIAN ACTOR COMMITTEE MEET
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை (19.08.2018) மதியம் 2 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை ஏற்று நடத்துகிறார்.
இந்த பொதுக்குழு மிக முக்கியமானது என்பதால் புதிதாக அரசியலில் இறங்கியுள்ள ரஜினி, கமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படவும் உள்ளன.
நவம்பர் மாதம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால், தேர்தல் தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தேர்தல் தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டால், அதிருப்தியாளர்கள் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் நாளை கூடப்போகும் பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் தேர்தலில், விஷால் அணி மீண்டும் களம் இறங்கினால், அவர்களுக்கு எதிராக டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் அடங்கிய அணி களம் இறங்க தயாராகி வருகிறார்கள்.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, நடிகர் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது. நாளை நடக்கவுள்ள இந்த கூட்டத்திற்காக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.