அடுத்தடுத்து உயிரிழந்த பிரபல நடிகர்கள்! பிரதமர் மோடி வெளியிட்ட உருக்கமான பதிவு!
Modi twit to rishi kapur death
2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் இருக்க திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் ஹிந்தி நடிகர் இர்பான் கான் மறைந்த நிலையில் நேற்று ஹிந்தி சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ரிஷி கபூர் காலமானார்.
பிரபல இந்தி நடிகரான ரிஷி கபூர், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் மும்பை திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதனால் உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் நேற்று காலை 8.45 மணியளவில் காலமானார்.
இறுதிச்சடங்கில் ரிஷி கபூரின் மனைவி நீத்து, மகன் ரன்பீர் கபூர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நடிகர்கள் அபிஷேக் பச்சன், ஆலியா பட், அயன் முகர்ஜி, ரோகித் தவான் உள்ளிட்ட ஒரு சில திரைப்பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
நடிகர் ரிஷிகபூரின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பன்முகத்தன்மை கொண்ட, அன்பானவர், கலகலப்பானவர். அவர் தான் ரிஷிகபூர். அவர் திறமையின் சக்திமையமாக திகழ்ந்தார். அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறியுள்ளார்.