ஒரு நொடிதான்.. நர்ஸின் அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் பெருவிரல்! துடித்துப்போன பெற்றோர்கள்!
தஞ்சாவூர் அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பிரியதர்ஷினி. திருமணமாக
தஞ்சாவூர் அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பிரியதர்ஷினி. திருமணமாகி ஓராண்டுகள் ஆனநிலையில் அவர்களுக்கு கடந்த 25-ந்தேதி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததாலும், வயிற்றில் கோளாறு இருந்ததாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு குளுக்கோஸ் மட்டுமே ஊசி மூலமாக கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதற்காக குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சாதனம் பொருத்தப்பட்டு பிளாஸ்திரி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் உடல்நிலை நன்கு தேறிய நிலையில் அவர்களை டிஸ்சார்ஜ் செய்ய ஏற்பாடு செய்ய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நர்ஸ் குழந்தையின் கையில் இருந்த பிளாஸ்திரியை கத்தரிக்கோலால் வெட்டியபோது, தவறுதலாக குழந்தையின் பெரு விரல் துண்டானது. இந்நிலையில் கையில் ரத்தம் சொட்ட சொட்ட கதறிய குழந்தையை கண்டு தாயும் அழுதுள்ளார். பின்னர் உடனடியாக இதுகுறித்து மருத்துவர்களிடம் கூறிய நிலையில், அவர்கள் விரைந்து குழந்தையின் விரலை இணைத்து தையல் போட்டுள்ளனர். ஆனால் குழந்தையின் விரல் ஒன்று சேருமா? என்பது குறித்து இரண்டு நாட்களுக்கு பிறகு தான் தெரியவரும் என கூறப்படுகிறது
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது நர்சின் அலட்சியம்தான் காரணம் என கூறியுள்ளனர். மேலும் இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அந்த நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.