மன அமைதிக்காக போனேன்... ஆனால் என்னுடைய தாலியையே தொலைச்சிட்டு வந்துட்டேன்! அந்த சம்பவத்தை நினைத்து வேதனையோடு வீடியோ வெளியிட்ட நடிகை வினோதினி..!!!
சென்னை தி.நகர் ஸ்பாவில் மசாஜ் செய்தபோது தங்கத் தாலிச் சங்கிலியை பறிகொடுத்ததாக நடிகை வினோதினி புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வினோதினி, சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஸ்பா ஒன்றில் தனது தங்கத் தாலிச் சங்கிலியை இழந்ததாக புகார் தெரிவித்துள்ளார். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக ஸ்பாவுக்குச் சென்ற நிலையில், மசாஜின்போது கழற்றி வைத்த நகை மாயமானதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வெளியிட்ட வீடியோவும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
மசாஜின்போது கழற்றி வைத்த தாலிச் சங்கிலி
‘வண்ண வண்ண பூக்கள்’, ‘ஆத்தா உன் கோயிலிலே’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த வினோதினி, மன அமைதிக்காக தி.நகரில் உள்ள ஸ்பாவுக்குச் சென்றுள்ளார். மசாஜ் செய்வதற்காக தனது கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் சங்கிலியைக் கழற்றி, ஸ்பா ஊழியர்கள் வழங்கிய டப்பாவில் வைத்ததாக தெரிவித்துள்ளார்.
மசாஜ் முடிந்ததும் ஏற்பட்ட அவசரமான சூழ்நிலையிலும், அங்கிருந்து கிளம்பியபோது இருந்த ரிலாக்ஸ் மனநிலையிலும் அந்த நகையை எடுத்துச் செல்ல அவர் மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்ததும் தூங்கியுள்ளார். இதற்கிடையே கணவரின் குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்பாராத மரணம் காரணமாக அவசரமாக அங்கு சென்றதால், நகை மாயமானது உடனடியாக அவரது கவனத்துக்கு வரவில்லை.
இரண்டு நாட்களுக்கு பிறகு தெரியவந்த அதிர்ச்சி
சுமார் இரண்டு நாட்கள் கழித்துதான் தனது தாலிச் சங்கிலி காணாமல் போனதை வினோதினி உணர்ந்துள்ளார். உடனடியாக ஸ்பாவுக்குச் சென்று விசாரித்தபோது, அங்கிருந்த ஊழியர்களும் உரிமையாளரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இத்தனை நாட்கள் கழித்து வந்து கேட்பதால் தங்களால் எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது என ஸ்பா தரப்பினர் கூறியதாகவும் வினோதினி தெரிவித்துள்ளார். தான் புறப்படும்போது செருப்பை கூட மரியாதையாக எடுத்துக் கொடுத்த ஊழியர்கள், டப்பாவில் வைத்திருந்த நகையை திருப்பிக் கொடுக்கவில்லை என அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்; பெண்களுக்கு எச்சரிக்கை
இதையடுத்து, நகை மாயமானது தொடர்பாக காவல் நிலையத்தில் வினோதினி அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், ஸ்பா போன்ற இடங்களுக்குச் செல்லும் பெண்கள் விலைமதிப்பற்ற நகைகளை எடுத்துச் செல்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முடிந்தவரை இதுபோன்ற இடங்களுக்கு நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மன அமைதிக்காக சென்ற இடத்தில் தாலிச் சங்கிலியை இழந்ததாக அவர் வெளியிட்டுள்ள ஆதங்க வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. ஸ்பா நகை மாயமான புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தனது சங்கிலி மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வினோதினி காத்திருக்கிறார்.