முழு கொள்ளளவை எட்டும் வைகை; 5 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை..!
vaikai dam - madurai dindukal - sivakangai - theani

தமிழகத்தில் உள்ள வைகை அணை விரைவாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் 5 மாவட்டங்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இருப்பினும் இன்னும் தீவிரம் அடையவில்லை எனினும் ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வைகை அணை மிக விரைவாக நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
71 அடி உயரமுள்ள வைகை அணையானது தற்சமயம் 68.5 அடி உயரத்தை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையால் பயன்பெறும் 5 மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
விரைவாக உயரும் அணையின் நீர் மட்டம் ஆனது முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒருசில அடிகளே இருப்பதால் அணை நிரம்பும் சமயத்தில் நீரானது வெளியேற்றப்படும்.
அப்பொழுது ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கும் அபாயம் இருப்பதால் பொதுப்பணித்துறை ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ளது.