திருமுருகன் காந்தி: சர்க்காருக்கு எதிராக செயல்பட அரசுக்கு நேரம் இருக்கிறது; ராஜலட்சுமி படுகொலை குறித்து பேச நேரமில்லையா?
salem rabe case thirumurugan gandhi
தமிழக அரசுக்கு சர்க்கார் படத்திற்கு எதிராக செயல்பட நேரம் இருக்கும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமி குறித்து பேச நேரமில்லையா? என்று திருமுருகன் காந்தி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜலட்சுமி(13 ) என்ற சிறுமிக்கு பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் ராஜலட்சுமியின் தாயாரின் கண் முன்னே அவருடைய தலையைத் துண்டித்து தினேஷ் குமார் படுகொலை செய்தார்.
இந்த சம்பவத்திற்கு தமிழகத்தின் அனைத்து பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் தமிழக அரசு சார்பில் இந்த படுகொலை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராஜலட்சுமியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நிர்பயாவிற்கும், ஸ்வாதி கொலைக்கும் அரசு செலுத்திய கவனத்தை, ராஜலட்சுமி படுகொலைக்கு ஏன் செலுத்தவில்லை.
இதுவரை முறையான விசாரணை தொடங்கவில்லை. 8 வழிச்சாலை தடைபட்ட போது, முதலமைச்சருக்கு வந்த பதற்றம் ஒரு பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக வரவில்லை. அதுவும் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளது.
சர்கார்’ படத்திற்கு எதிராக அரசும், அமைச்சர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேச நேரம் இருக்கிறது. ஆனால் ராஜலட்சுமி என்ற பெண்குழந்தையின் படுகொலை பற்றி பேச நேரமில்லை.
இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என்ன உதவி செய்தீர்கள் என்று திருமுருகன் காந்தி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.