"செத்தும் நிம்மதி இல்லடா!" இறந்த கணவரின் உடலுக்காக மனைவிகள் பண்ணும் கூத்தை பாருங்க
"செத்தும் நிம்மதி இல்லடா!" இறந்த கணவரின் உடலுக்காக மனைவிகள் பண்ணும் கூத்தை பாருங்க
ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு 2 மனைவிகள். ஒருவர் பெயர் தங்கம்மாள், மற்றொருவர் பெயர் கவுரி. கோலப்பாக்கத்தில் கவுரி வசித்து வருகிறார். இவருடன்தான் தட்சிணாமூர்த்தி வாழ்ந்து வந்துள்ளார்.
தட்சிணாமூர்த்தி கடந்த 16-ந் தேதி மரணம் அடைந்தார். இதுகுறித்து தங்கம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தட்சிணாமூர்த்தியின் உடலை கண்டு இரு மனைவிகளும் மாறி மாறி கதறி புரண்டு அழுதனர். கடைசியில் அவரை அடக்கம் செய்வது குறித்த பேச்சு எழுந்தது.
ரெண்டு பொண்டாட்டிக்காரர்களுக்கு, இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் சந்தித்து கொண்டால் எப்போதுமே வில்லங்கமா தான் இருக்கும். அதேபோலத்தான் தட்சிணாமூர்த்திக்கு இறந்த பிறகும் இங்கே நடந்துள்ளது.
தங்கம்மாள், கணவர் உடலை இந்து முறைப்படி சோமங்கலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி உள்ளார். கிறிஸ்தவ முறைப்படி கோலப்பாக்கத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கவுரி பிடிவாதமாக நின்றுள்ளார்.
கிறிஸ்தவ முறைப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று தட்சிணாமூர்த்தி உயிருடன் இருக்கும்போது எழுதிய ஒரு உயிலை கொண்டு வந்து கவுரி தங்கம்மாளிடம் தந்தார். அந்த உயிலை ஏற்க மறுத்த தங்கம்மாள், போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். எந்த முடிவும் எட்டப்படாததால் போலீசார் தட்சிணாமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைத்தனர்.
இந்தநிலையில் தட்சிணாமூர்த்தியின் உடலை ஒப்படைக்கக்கோரியும், இறுதிச் சடங்கு நடத்த பாதுகாப்பு வழங்கக்கோரியும் தங்கம்மாளும், கவுரியும் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியும், இருவரையும் அழைத்து சமரசம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். இருவரும் கேட்கவில்லை. யாராவது ஒருவர் அனுசரித்து போங்கள் என்று அறிவுறுத்தினார். அதனையும் 2 பேரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் நீதிபதி, இரண்டு நாட்கள் காலக்கெடு விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தக் காலக்கெடுவுக்குள் இரு தரப்பினரும் சமரசத்திற்கு முன்வராவிட்டால், தட்சிணாமூர்த்தியின் உடலை உரிமை கோரப்படாத உடலாக கருதி அடக்கம் செய்ய போலீசாரும், வருவாய்த்துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இப்படியாக இறந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார் தட்சிணாமூர்த்தி.